சனி, 3 ஜனவரி, 2015

நினைவலைகளில் கலைமாமணிதிருச்சிபாரதன்

நினைவலைகளில் கலைமாமணிதிருச்சிபாரதன்
                      கவிஞர் முனைவர் மா.தாமோதரகண்ணன்
                                                 அலைபேசி-9442663637
          திருச்சிமாவட்டம் பாலக்கரை எடத்தெருவில் 30-09-1934 ஆம் ஆண்டு கோ.இரங்கசாமி-காமாட்சிஅம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.இயற்பெயர் தங்கவேலன்.பள்ளிப் பருவத்திலேயே இலக்கியங்கள் படைக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.இவரின் முதல் படைப்பு 1946-இல் பாலர்மலரில் வெளியானது.12 வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் நடத்தினார். இவ்விதழுக்கு இவரைப்போல இன்னொரு மாணவரே உறுதுணையாக நின்றார்.அவர்தான் இன்றைய புகழ் பெற்ற நாவல் ஆசிரியர் நாதன் என்னும் ஐ.சண்முகநாதன் ஆவார்.
            தங்கவேலன் என்பர் திருச்சிபாரதன் ஆனது எப்படியெனில் இரத்தக்கண்ணீர் படத்தில் ‘‘ குற்றம் புரிந்தவன்….” ராஜராஜன் படத்தில் ‘‘ நிலவோடுவான் முகில்….” மங்கையர்க்கரசி படத்தில் ‘‘ காதல் கனிரசமே…” பாடல் உள்ளிட்ட காலத்தால் அழியாத பலபாடல்கள் இயற்றிய கு.சா.கி. என்று அன்புடன் அழைக்கப்பட்ட கு.சா.கிருஷ்ணமூர்த்தி மீதுள்ள ஈடுபாடினால் தன்னுடைய எழுத்துலகின் மானசீகக் குருவாக கவிஞர் கு.சா.கி.  யை ஏற்றுக் கொண்டார். அவர் எழுதும் படைப்புகளை எல்லாம் கு.சா.கி.தாசன் என்ற புனைப் பெயரில் பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.குருவும் சீடரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புப் பாராட்டினார்கள்.பின்னொரு நாளில் கு.சா.கி. யை நேரில் சந்தித்தார். ‘‘ யாரும் யாருக்கும் தாசனாக வேண்டாம் ” என்று அன்புக் கட்டளையிட்டு கு.சா.கி. அவர்களே ‘‘ திருச்சி பாரதன் ” எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.அன்று முதல் நகமும் சதையுமாகவே நட்பாடினார்கள்.  திருச்சி பாரதன் எனும் பெயரிலேயே குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள், நாடகங்கள், முருகப்பக்திப்பாடல்கள், தமிழிசைப்பாடல்கள் பல படைத்தார். மேலும் மேல்நாட்டு மருமகள், கந்தர்அலங்காரம், தோடிராகம், ராகபந்தங்கள் ஆகிய சில திரைப்படங்களில் ஒவ்வொரு பாடல் எழுதிப் புகழ் பெற்று கலைமாமணி பட்டமும் வென்று தமிழ்இலக்கியவரலாற்றில் தனக்கெனத் தனிஇடம் பெற்றார்.
           அந்தக்காலத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் திருச்சி வெல்லமண்டியில் சில மாதங்கள் கணக்கராகப் பணிபுரிந்தார் பின்னர் ஆருயிர் நண்பர் ஐ.சண்முகநாதன் வேண்டுகோளின் பேரில்  தமிழர்தந்தை சி.பா.ஆதித்தனார் காலத்திலேயே தினந்தந்தி செய்தி ஆசிரியர் பணிக்குச்சென்றார். தினந்தந்தியில் பணியாற்றுபவர்கள் அவ்வளவு எளிதில் மற்ற கலைத்துறையில் ஈடுபட முடியாதபடி கட்டுப்பாடுகள் நிறைய உண்டு.இதையெல்லாம் கடந்து சி.பா.ஆதித்தனாரின் அன்பும் அறிவுரையும் பெற்று சிறப்பு அனுமதியுடன் கலைத்துறையில் கால்பதித்துச் சாதனைகள் பல புரியத்துவங்கினார். கவிஞர் எழுதிய ‘‘ பலாப்பழம் ’’ நாடக அரங்கேற்றத்திற்கு  சி.பா.ஆதித்தனார் தலைமையேற்று ‘‘கலைத்துறை வாயிலாகவும் தமிழ் அருமையை உணர்த்தவேண்டும் என்று கூறும் பாரதிதாசனின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இந்நாடகம் உள்ளது ’’ என்றும் பாராட்டியுள்ளார். ஏற்றுக்கொண்ட செய்தி ஆசிரியர் பணியில் 32 ஆண்டுகள் தினந்தந்தியில் திறம்பட பணியாற்றி பின்னாளில் விருப்ப ஓய்வுப்பெற்றார்.
           1965 ஆம் ஆண்டு திருச்சிபாரதன் எழுதிய ‘‘ அப்பாவின் ஆசை ’’ நாடகம் டி.கே.சண்முகம் கலைக்குழுவினரால் அரங்கேற்றப்பட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெற்றிகரமாக வலம் வந்தது. இது குழந்தை களுக்கான நாடகம்.இந்தியாவிலேயே முதல்முதலில் தொழில்முறையில் குழந்தைகளுக்கான நாடகம் அரங்கேற்றிய பெருமை டி.கே.சண்முகம் கலைக்குழுவினருக்கு உண்டு.அதே போல இந்தியாவிலேயே முதல்முதலில் தொழில்முறையில் குழந்தைகளுக்கான நாடகம் எழுதிய பெருமை திருச்சிபாரதனுக்கு உண்டு. பேரறிஞர்அண்ணா இந்நாடகத்தை நேரில் கண்டு புகழ்ந்துரைத்துள்ளார்.இந்நாடகத்தில் ‘‘ உழைத்துப் பிழைக்க வேண்டும்….’’என்னும் பாடல் ஒரு காட்சியில் அம்புலி பாடி பதிவு செய்யப்பட்டது ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பாகும்.முக்கிய கதைப்பாத்திரம் ஏற்று நடிக்கும் ஒரு சிறுவன் வாயசைத்து நடிப்பது வழக்கம். ஒருநாள் ஒலிநாடா அறுந்து விட்டது  சிறுவனோ சமயோசிதமாக பின்னாலிருந்து இசைக்கப்படும் இசைக்குழுவினரின் இசைக்கேற்ப பாடி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான்.அன்று முதல் அச்சிறுவன் மேடையில் பாடும் நடிகராகவும் பெயர் பெற்றார். ‘‘ அப்பாவின் ஆசை ’’ நாடகம் வாயிலாகப் பாடல் பயிற்சிப்பெற்ற அந்தச் சிறுவனே இன்றைய புகழ்பெற்ற திரைநட்சத்திரம் பத்மஸ்ரீ கமலஹாசன் ஆவார்.
           இவருடைய மைல்கல் படைப்புகளில் ஒன்றான ‘‘ கந்தன் காவியம் ’’ நாட்டியநாடகம் 700 முறைக்குமேல் அரங்கேறி யுள்ளது.இந்நாடகத்தின் 100 வது அரங்கேற்றத்திற்கும் 500 வது அரங்கேற்றத்திற்கும் தலைமை தாங்கிய பெருமை நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு உண்டு. மேலும் அவரே, ‘‘ ஆயிரம்முறை பார்த்தாலும்  கந்தன் காவியம்  நாட்டியநாடகம் அலுக்காது ’’ என்றும் புகழ்ந்துரைத்துள்ளார்.
 
              திருச்சிபாரதனின் இலக்கியப் பணியைப் பெருபாலும் வளர்த்த இதழ்களில் முதன்மைஇடம் பெறுவது புரட்சிக்கவிஞரின் ‘‘ குயில் ’’ இதழின் தொடர்ச்சியாக விளங்கும் கலைமாமணி பொன்னடியாரின் பொன்விழா காணும் ‘‘ முல்லைச்சரம் ’’ இதழ் ஆகும்.இவ்விதழில் வெளியிடப்பட்ட திருச்சிபாரதனின் படைப்புகளைத்தொகுத்தால் அது பெரியநூல் எனப்பெயர் பெறும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உருவாக்கிய சென்னைத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினாரகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
                   திருச்சிபாரதன் தமிழ்இலக்கியத்தில் காலத்திற்கேற்ப  புதுமைகளைச் செய்ய வேண்டும் என்பதில் தனியாத ஆர்வம் உடையவர்.     சிவனுக்கு திருவெம்பாவை, திருமாலுக்கு திருப்பாவை போல முருகனுக்காக ‘‘முருகுப்பாவை ” என்னும் நூலையும் சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு போல முருகனுக்காக ‘‘குகநானூறு ” ,‘‘சுகநானூறு ” ஆகிய இருநூல்களையும் நீதி நூலான இன்னாநாற்பது போல ‘‘தமிழ்நாற்பது” நூலையும் எழுதினார். திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றி திருக்குறள் இசைப்பாடல் நூலையும் அருணகிரிநாதர் போல முருகன் மீது 1340 இசைப்பாடல்கள் கொண்ட ‘‘குகன் கீதாஞ்சலி ” நூலையும் எழுதிவெளியிட்டார்.
             ஒரே நாள் இரவில் 100 விதமான இராகங்களில் பிழையின்றி அடித்தல் திருத்தமின்றி இசையமைப்பாளர் நெல்லை ஆர்.சுப்பிரமணியத்திற்குப் பாடல்கள் தந்தார்.
                    திருச்சிபாரதன் பாடல்களை மட்டுமே பாடக் கூடிய முழுஇசைக்சேரிகள் 180 க்கும் மேல்நடந்துள்ளன.பெரும்பாலான முழுஇசைக்சேரிகளைப் பாடியவர்கள் திருபுவனம் ஜி.ஆத்மநாதன் ,சீாகாழி கோவிந்தராஜன் ஆவார்கள்.
                    இவருடைய பல படைப்புகளைப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆய்வுக்கு ஏற்றுக்கொண்டன.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘‘ குகநானூறு ” நூலைச் சிறந்த நூலாக அறிவித்து 5000 ரூபாய் பரிசு வழங்கியது.
          திருச்சி வானொலி அங்கிகரித்த 12 கவிஞர்களில் திருச்சியில் பாரதனும் ஒருவர் என்ற புகழும் உண்டு.
        இவர் எழுதிய நூல்களுக்கு அணிந்துரை வழங்கிய அறிஞர் பெருமக்கள் எண்ணிக்கையில் நூறுக்கும் மேல் உள்ளார்கள்.
        தமிழகஅரசின் கரும்பலகைத்திட்டத்தின் கீழ் கவிஞர்  எழுதிய ‘‘ பூந்தோட்டம் ’’ நூலினை 6000 பிரதிகள் வாங்கிக்கொண்டார்கள்.    குழந்தைகள், சமூகம், கவிதை, இசை, நாட்டியம், நகைச்சுவை, தத்துவம்,வரலாறு,மேடைநாடகம் என ஒன்பது வகையான தமிழ் நாடகங்களையும் 2500 க்கும் மேற்பட்ட தமிழிசைப்பாடல்களையும் கலைஉலகிற்குப் படைத்தளித்தார்.

        கலைமாமாணி உட்பட 12 க்கும் மேற்பட்ட விருதுகளும் பல்வேறு அமைப்புகளின் பாராட்டும் பெற்றவர்.  திருவையாறு தமிழிசை மன்றத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் துணைத்தலைவராகவும் இருந்து மன்றத்திற்குப் புகழ்சேர்த்தார்.
          பெரியவர்பக்தவச்சலம், பேரறிஞர்அண்ணா ,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். போன்ற முதல்வர்களிடம் பாராட்டுப்பெற்றவர்.
          75 வயதில் அவர் மறைந்தார்(26-11-2008) அப்பொழுது அவர் எழுதிய  நூல்கள் எண்ணிக்கையும் 75 ஆக இருந்தது.

           முத்தமிழ்ச்சேவையில் 65 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து சாதனைகள் பல செய்தவர் கலைமாமாணி கவிஞர்திலகம் திருச்சிபாரதன் நூல்களை நாட்டுடைமையாக்கியும் அவர் வாழ்ந்த வீட்டினை நினைவு இல்லமாக்கியும் அவர் நடைபயின்ற வீதிக்கு அவர்பெயரையும் அவர் பெயரில் நூலகமும் ஞான பீட விருதும் திருச்சியில் பாரதன்மணிமண்டபமும் அஞ்சல்தலை வெளியிட்டும் திருச்சியிலும் சென்னையிலும் சிலை அமைத்து அவர் புகழ் பாடிடவேண்டும்.



புதன், 7 மே, 2014

திருச்சி பாரதனும் கு.சா.கிருஷ்ணமூர்த்தியும்

காற்று உள்ளவரை காதுகள் உள்ளவரை
 நூற்றாண்டு விழா நாயகன் கு.சா. கிருஷ்ணமூர்த்தி
                       (1914 -2014 )
              முனைவர் மா.தாமோதரகண்ணன்
      இரத்தக்கண்ணீர் படத்தில் ‘‘ குற்றம் புரிந்தவன்….” ராஜராஜன் படத்தில் ‘‘ நிலவோடுவான் முகில்….” மங்கையர்க்கரசி படத்தில் ‘‘ காதல் கனிரசமே…” போன்ற காலத்தால் அழியாத தமிழ்த்திரைப்பாடல்கள்  750 க்கும் மேல் எழுதியவர் கு.சா.கி. என்று அன்புடன் அழைக்கப்பட்ட கு.சா.கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
       இவர் கும்பகோணத்தில் 19-05-1914 ஆம்ஆண்டு சாமிநாதபிள்ளை-மீனாட்சிஅம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.மூன்றாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு நாடகத்தின் மீதுள்ள காதலால் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்ற புகழ்பெற்ற நாடகக் கலைஞர்களுடன் சேர்ந்து இலங்கை ,மலேசியா, சிங்கப்பூர், பர்மா நாடுகளுக்கெல்லாம் சென்று வென்று வந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் 'அவ்வையார்' நாடகத்தில் கு.சா.கி. எழுதிய 'பெருமை கொள்வாய் தமிழா' என்ற  பாடலை டி.கே.சண்முகம் உணர்ச்சிப் பொங்கப் பாடுவார். நாகர்கோவிலில் இந் நாடகம் நடந்தபோது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வந்திருந்தார். இந்தப்பாடல் பாடப்பட்ட போது அதை எழுதிய கு.சா.கி.யை   கவிமணியாரிடம் அறிமுகப்படுத்தினார்கள். அவர் கு.சா.கி. யின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டாராம். நிரந்தர வருவாய்க்காகப் புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும் படக்கடையையும் தொடங்கினார். வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி கு.சா.கி.யின் குடும்பத்தில் நடந்தது.இந்நிகழ்வைக் கண்டு கவிஞா் மனம் புழுங்கினார்.இதை அடிப்படையாக வைத்து  ‘‘ அந்தமான் கைதி ” என்னும் நாவலை எழுதி நூலாகவும் வெளியிட்டார்.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நாவலை நாடகமாக மாற்றி நண்பர்களுடன் நடித்தும் வந்தார். அந்நாளில் புகழ் பெற்ற டி.கே.எஸ்.சகோதரர்களாலும் இந் நாடகம் நடத்தப்பட்டது. கு.சா.கி.க்கு மேலும் மேலும் புகழ் சோந்தது.அறிஞர் அண்ணா ,பாவேந்தர் பாரதிதாசன் ,கல்கி, வ.ரா போன்றோர் நேரில் வந்து நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்கள்.
       தமிழ்த்திரையுலகில் பாடல்ஆசிரியராகத்தான் நுழைந்து ஆண்டாள், போஜன் முதலிய படங்களுக்குப் பாடல் எழுதி வந்தார். 1952 ஆம்ஆண்டு ராதாகிருஷ்ணன் பிலிம்சார் ‘‘ அந்தமான் கைதி ” நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முன்வந்தார்கள்.கதை, வசனம் பாடல்களை அவரே எழுதினார்.எம்.ஜி.ஆர் முதன்முதலில் கதைநாயகனாக நடித்து மாபெரும் வெற்றிப்படமாக ஆனது. ஜுபிடர் அதிபர் சோமு அவர்களால் கு.சா.கி. சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.பின்னாளில் ஜுபிடரின் பல  படங்களுக்குக் கதை, வசனம் ,பாடல்கள் எழுதினார்.சந்திரகாந்தா படத்தில் கதைநாயகனாக நம்மாழ்வார் என்ற நடிகரை நடிக்கவைக்க இருந்தார்கள். கு.சா.கி. ஜுபிடர் அதிபர் சோமுவிடம் வாதாடி பி்.யு.சின்னப்பாவைக் கதைநாயகனாக நடிக்க வைத்துப் பெரியஅளவில் வெற்றியைத் தேடித்தந்தார்.
         ரத்தக்கண்ணீர் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசை அமைத்துப் பாடிய 'குற்றம் புரிந்தவன்….' என்ற பாடல் பெரிய `ஹிட்' ஆகி  கு.சா.கிக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. கு.சா.கியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி  தனி இசைத்தட்டாகவும் வெளியிட்டு இருந்தார்கள். அதைத்தான் படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
             உவமைக்கவிஞர் சுரதா, கு.மா.பாலசுப்பிரமணியம், ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி  ஆகியோரைத் தமிழ்த்திரையுலகில் அறிமுகம்  செய்து வைத்த பெருமையும் கு.சா.கி.க்கு உண்டு.
             'மங்கையர்க்கரசி' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கு.சா.கிக்குத்தான் வந்தது. இளைஞரான சுரதாவை பட அதிபரிடம் அழைத்துச் சென்று, ‘‘இவர் என்னைவிட திறமைசாலி. இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ”  என்றார்இப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு சுரதாவுக்கு கிடைத்தது. கு.சா.கியும், கம்பதாசனும் பாடல்கள் எழுதினார்கள்.
        அகில இந்தியஅளவில் புகழ்பெற்ற நடிகை வகீதாரஹ்மானை முதன்முதலில் திரைப்படத்தில் ‘‘ ஒன்றே குலம்” படத்தில் நர்ஸ் வேடத்தில் முதன்முதலில் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.
       கு.சா.கி.  1943- ஆம்ஆண்டு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பாளராகவும்  இருந்தவர். அப்போதைய புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக (மன்னர் ஆட்சியில்) இருந்தது. அங்கு மக்களாட்சி ஏற்பட நடத்தியப் போராட்டத்திற்கு முக்கிய பங்குவகித்தார்.

         'சிலம்புச் செல்வர்' .பொ.சி.யின் நெருங்கிய மாணவரகவும் தமிழரசுக் கழகத்தை .பொ.சி. தொடங்கியதிலிருந்தே செயற்குழு உறுப்பினராக அக்கட்சியில் அங்கம் வகித்தார். உணர்ச்சிப் பொங்கப்பேசும் நட்சத்திரப்பேச்சாளராகவும் விளங்கினார்.தழிழ்நாட்டின் எல்லைகளை இணைக்கும் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

              திருச்சியில் தங்கவேலன் எனும் கவிஞர் கு.சா.கி.  யைத் தன்னுடைய எழுத்துலகின் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். எழுதும் படைப்புகளை எல்லாம் கு.சா.கி.தாசன் என்ற புனைப் பெயரில் பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.குருவும் சீடரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புப் பாராட்டினார்கள்.பின்னொரு நாளில் திருச்சிக்கவிஞர்   கு.சா.கி. யை நேரில் சந்தித்தார். ‘‘ யாரும் யாருக்கும் தாசனாக வேண்டாம் ” என்று அன்புக் கட்டளையிட்டு  அக்கவிஞருக்கு ‘‘ திருச்சி பாரதன் ” எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.அன்று முதல் நகமும் சதையுமாகவே நட்பாடினார்கள்.  திருச்சி பாரதன் எனும் பெயரிலேயே குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள், நாடகங்கள், முருகப்பக்திப்பாடல்கள், தமிழிசைப்பாடல்கள் ,சில திரைப்படப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்று கலைமாமணி பட்டமும் வென்று தமிழ்இலக்கியவரலாற்றில் தனக்கெனத் தனிஇடம் பெற்றார்.
       திருவருட்பிரகாச வள்ளலாரின் 101 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் ‘‘ அருட்பா இசையமுதம் ” என்னும் பெயரிலும் 100 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் ‘‘அமுதத் தமிழிசை” என்னும் பெயரிலும் வெளியிட்டார்.
           'தமிழரசுக் கழகத்துடன்' இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவிஞராகவும், தமிழரசு இயக்கக் கவிஞராகவும் திகழ்ந்து தமிழ்த்திரையுலகில் சாதனைகள் பல புரிந்த கு.சா.கி., அவர்களுக்கு 1966- ஆம் ஆண்டு தமிழக அரசு ‘ கலைமாமணி' விருது வழங்கியது.



       கு.சா.கி. எழுதிய  அமுதத் தமிழிசை  ,  அருட்பா இசையமுதம் , அந்தமான் கைதி , இசையின்பம் , பருவ மழைதமிழ் நாடக வரலாறு , கலைவாணன் (நாடகம்) ஆகிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.   கு.சா.கிருஷ்ணமூர்த்தி 1990-ஆம் ஆண்டு மே 13-நாள் தமது 76-வது வயதில் காலமானார்.காற்று உள்ளவரை காதுகள் உள்ளவரை நூற்றாண்டு விழா நாயகனான கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் தங்கரிகள் தமிழ்க்கானங்கள் வாழும்.